நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!
காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் தொடர்புடைய வழக்கு விசாரணை
கனடா நாட்டில் சுர்ரே மாகாண நீதிமன்றத்தில் நிஜ்ஜார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்துக்கு முன்பாக நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கைகளில் கொடியேந்தி போராட்டம் நடத்தினர்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுர்ரேவில் உள்ள குருத்வாரா வளாகத்தில், காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் கனடிய நாட்டு குடியுரிமை பெற்றவர்.
இந்த வழக்கில் கமல்ப்ரீத் சிங், கரன்ப்ரீத் சிங் மற்றும் கோல்டி பிரார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
கனடா எட்மண்டனைச் சேர்ந்த மூன்று பேரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சுர்ரே நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை காண கூடுதலாக 50 பேருக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
காலிஸ்தான் பிரிவினையைக் கோரும் பதாகைகளுடன் அவர்கள் போராடி வருகிற படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
தனித்தனியாக விடியோ வழியில் ஆஜரானவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்னவென்பதை தாங்கள் அறிந்துகொண்டதாக தெரிவித்தனர். நீதிமன்ற விசாரணைகள் ஆங்கிலத்தில் நடைபெற அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவர்களின் வழக்குரைஞர்களிடம் பேச நேரம் அளிக்கும் பொருட்டு இந்த வழக்கானது மே 21-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிஜ்ஜார் கொலைக்குக் காரணமாக கருதப்படும் இந்திய அதிகாரிகள் படங்கள் அச்சிடப்பட்ட பதாகைகள், நோட்டீஸ்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் இரு நாட்டுக்குமிடையேயான ராஜ்ய உறவை கடந்த ஆண்டு செப்டம்பரில் பாதித்தது குறிப்பிடத்தக்கது.