தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 17 பாலஸ்தீனர்கள் பலி!
வடக்கு காஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலி.
வடக்கு காஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை இன்று (நவ. 10) அறிவித்துள்ளது.
பலியானோரில் 9 பேர் பெண்கள் என்றும், பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காஸாவின் மத்திய கிழக்கில் உள்ள ஜபாலியா நகரத்தில், போரில் உடமைகளை இழந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மீது கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஜபாலியா நகரத்தை முழுவதுமாக இஸ்ரேல் ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர். இதனையொட்டி அமைந்துள்ள பெயிட் லாஹியா, பெயிட் ஹனோன் ஆகிய பகுதிகளையும் இஸ்ரேல் ராணுவத்தினர் தங்கள் வளையத்துக்குள் கொண்டுவந்து தனிமைப்படுத்தியுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அருகிலுள்ள காஸா நகருக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மீண்டும் வடக்கு காஸா மீது குறி
காஸா நகரத்திலுள்ள அல்-அஹ்லி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஃபடேல் நயிம் இது தொடர்பாக பேசியதாவது,
''இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகிறோம். இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை'' எனக் குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 13 மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரின் தொடக்கத்தில், வடக்கு காஸா நகரம் முழுவதும் இஸ்ரேல் ராணுவத்தால் இலக்கு வைத்து தகர்க்கப்பட்டது.
இதனிடையே தற்போது மீண்டும் ஹமாஸ் குழுவினர் மீண்டும் ஒருங்கிணைந்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் வடக்கு காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!