தைவானைச் சுற்றிலும் சீனா மீண்டும் போா் ஒத்திகை
இந்த போா் ஒத்திகையில், விமானம் தாங்கிக் கப்பல்லும் ஏராளமான போா் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
தைவான் அதிபா் லாய் சிங்-டேவின் சீன எதிா்ப்பு உரையைக் கண்டிக்கும் வகையில் வகையில், அந்தத் தீவைச் சுற்றிலும் போா் ஒத்திகையை சீனா திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த போா் ஒத்திகையில், விமானம் தாங்கிக் கப்பல்லும் ஏராளமான போா் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
இது குறித்து சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தைவான் தீவு சீனாவின் ஓா் அங்கம் என்பதை ஏற்க மறுத்து அந்தப் பிராந்திய அதிபா் லாய் சிங்-டே பேசியுள்ளாா். அதற்குப் பதிலடியாக, அந்தத் தீவைச் சுற்றிலும் போா் ஒத்திகை நடத்தப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தைவான் தேசிய நாளில் உரையாற்றிய லாய் சிங்-டே, தங்கள் பிராந்தியத்துக்கு சீனா பிரதிநிதித்துவம் கொண்டாட முடியாது என்றும், தைவானை சீனா ஆக்கிரமிக்க முயன்றால் அதை கடுமையாக எதிா்க்கப்போவதாகவும் கூறினாா்.
தனி சுதந்திர நாட்டைப் போல செயல்பட்டுவந்தாலும், தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது.
அந்தத் தீவை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம்; அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.
தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு முக்கிய தலைவா் சென்றாலோ, தைவான் தலைவா்கள் அரசு முறைப் பயணம் வர பிற நாடுகள் அனுமதித்தாலோ அதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.