முகப்பு
உலகம்

ஸ்பெயினின் தக்காளி திருவிழாவுக்கு 80 வயது! சிறுவர்கள் போட்ட சண்டையால் வந்த விழா!

ஸ்பெயினின் தக்காளி திருவிழாவின் 80ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெறவிருக்கிறது.

Updated On : 26 ஆகஸ்ட் 2025, 4:29 pm IST
தக்காளி திருவிழா - Alberto Saiz
பகிர்:

ஸ்பெயின் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, ஒட்டுமொத்த தெருவையும் தக்காளியால் சிவப்பு வண்ணமாக்கும் தக்காளி திருவிழாவின் 80ஆம் ஆண்டு கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெறவிருக்கிறது.

இந்த திருவிழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு மேல் விற்பனையாகிவரும்போது, இந்த திருவிழா பற்றி அறிபவர்கள் அதிருப்தி அடையலாம். ஆனால், இந்த தக்காளி உணவில் சேர்க்கப்படும் தக்காளி இல்லையாம். (நிம்மதிதானே?)

Advertisement

Advertisement

பல மணி நேரங்கள் நீடிக்கும் இந்த திருவிழாவுக்காக 120 டன் பழுத்த தக்காளிகள் புனோல் நகரிலிருந்து வரவழைக்கப்படுகிறது. திரைகளால் மூடப்பட்டிருக்கும் வீடுகளைச் சூழ்ந்த சாலையில் 22 ஆயிரம் பேர் குழுமி, ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை வீசிக் கொள்வார்கள். இந்த தக்காளி திருவிழாவில், உள்ளூர் மக்களுக்கு மட்டுமே இலவசம். வெளியூர், வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் 15 யூரோக்கள் செலுத்தி டிக்கெட் எடுத்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் பங்கேற்றவர்கள் கூறுவது என்னவென்றால், அங்கு ஒரு பயங்கர தக்காளி வெடிப்பு நிகழும் என்கிறார்கள்.

சரி ஒவ்வொரு ஆண்டும் நாமும் ஊடகங்களில், ஸ்பெயின் தெருவில் மக்கள் ஒன்றுகூடி ஒருவர் மீது ஒருவர் தக்காளியை வீசும் விழாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த விழாவின் பின்னணி தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவோம்.

ஏன் கொண்டாடப்படுகிறது?

கடந்த 1945ஆம் ஆண்டு, உள்ளூர் சிறுவர்களுக்கு இடையே உணவு சண்டை ஏற்பட்டு, அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தக்காளிகளை எடுத்து வீசிக்கொண்டதன் நினைவாகவே, தொடர்ந்து 80 ஆண்டுகளாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறதாம்.

இது 1950ஆம் ஆண்டுகளில், ஸ்பெயின் அதிபரால் நிறுத்தப்பட்டு, பிறகு மக்களின் போராட்டத்தால் மீண்டும் கொண்டாடப்பட்டதாகவும், ஊடகங்களில் இதுதொடர்பான செய்திகள் பரவி, உலக மக்களுக்கும் இதில் பங்கேற்க ஆர்வம் வந்ததாகக் கூறுப்படுகிறது.

அதன்படி, 2002ஆம் ஆண்டு, இந்த திருவிழா, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனம் ஈர்க்கும் விழாவாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு, கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தது.

சாப்பிடும் தக்காளி இல்லையாம்!

தக்காளி விலை தாறுமாறாக ஏறி வரும் நிலையில், இப்படி ஒரு திருவிழாவா என்று தமிழக மக்கள் கேட்பது நன்கு காதில் விழுகிறது. ஆனால், இது நாம் நினைப்பதுபோல உணவில் சேர்க்கப்படும் தக்காளி இல்லையாம். இதற்காகத் பிரத்யேகமாக தக்காளி விளைவிக்கப்படும் என்கிறார் புனோல் துணை மேயர்.

ஒருவேளை, டோமாடினா என்ற இந்த தக்காளித் திருவிழா நடைபெறவில்லை என்றால், நாங்கள் இந்த தக்காளியை பயிரிடவே மாட்டோம் என்கிறார்.

ஒரே ஒரு விதிமுறை

இதில் குழுக்கள், புள்ளிகள், நெறியாளர் எல்லாம் கிடையாது. ஆனால், ஒரே ஒரு விதிமுறை உள்ளது. யாருக்கும் காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக, ஒருவர் மீது தக்காளியை வீசும்முன், அதனை அவர்கள் கைகளால் மசித்துவிட வேண்டும்.

எனினும் சிலர் தற்காப்பு சாதனங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதிலும் உயரமாக இருப்பவர்கள்தான் அதிகம் தக்காளியால் அடி வாங்குவதாகவும் திருவிழா முடியும்போது, முழங்கால் அளவுக்கு தக்காளிக் கூழில் நாம் நின்றிருப்போம்/நீச்சலடித்துக் கொண்டிருப்போம் என்கிறார்கள் ஆண்டுதோறும் தக்காளி திருவிழாவில் பங்கேற்போம்.

காப்பியடிக்கும் அண்டை நாடுகள்

அண்மைக்காலமாக இதேப்போன்ற தக்காளி திருவிழாவை லண்டன், ஃப்ளோரிடா நகரங்களும் கொண்டாடுகின்றன. அவ்வளவு ஏன் ஹைதராபாத்திலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், தக்காளி திருவிழா என்றால் அதன் பூர்வீகம் ஸ்பெயின்தான் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

summary

Thousands of people will paint a town red with tomato pulp Wednesday, flinging the fruit at one another in the 80th anniversary of Spain’s famous “Tomatina” tomato street fight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.