பிரிட்டன்: சட்டவிரோதமாகக் குடியேறிய 609 பேர் கைது!
பிரிட்டனில் சட்டவிரோதமாகக் குடியேறிய 609 பேர் ஒரே வாரத்தில் கைது
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளநிலையில், பிரிட்டனும் அதற்கேற்றவாறு நாடுகடத்தும் பணியில் தீவிரமாக உள்ளது.
பிரிட்டனில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களால் எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அவர்களைக் கண்டறியும் பணியில் பிரிட்டன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுப்பதற்கு புதிய சட்டமும் கொண்டுவர உள்ளதாகக் கூறுகின்றனர்.
எல்லைக்குள் நுழைபவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களின் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பறிமுதல் செய்வதுடன், கைது செய்வதற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் புதிய சட்டம் இயற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: டிரம்ப்பின் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்!
இந்த நிலையில், பிரிட்டனில் உள்ள இந்திய உணவகங்கள், தேநீர் விடுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து, ஹம்பர்சைட் பகுதியில் உள்ள இந்திய உணவகத்தில் நடந்த சோதனையில் ஏழு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜனவரி முதல் 828 சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட 828 சோதனைகளில் 609 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. கடந்தாண்டு ஜனவரியில் 352 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 73 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரிட்டன் தேர்தலுக்குப் பின்னர், சட்டவிரோதமாகக் குடியேறிய 16,400-க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் பிரிட்டன் அரசு கூறியது.