முகப்பு
உலகம்

டிரம்ப் பதவியேற்கும்போது அரைக் கம்பத்தில் கொடி பறக்கும்! ஏன்?

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும்போது அரைக் கம்பத்தில் கொடி பறப்பது பற்றி..

Updated On : 8 ஜனவரி 2025, 1:45 pm IST
வெள்ளை மாளிகை - Manuel Balce Ceneta
பகிர்:

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கும்போது, அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.

முன்னாள் அமெரிக்க அதிபர், மறைந்த ஜிம்மி கார்ட்டர் தன்னுடைய 100வது வயதில் கடந்த ஞாயிறன்று காலமானார். அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் வரை டொனால்ட் டிரம்ப் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பதால், அமெரிக்க தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் நடவடிக்கையில் அவரால் எதையும் செய்ய இயலாது என்கின்றன தகவல்கள்.

Advertisement

Advertisement

அமெரிக்க அதிபராக இருந்து மறைந்த ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையிலும் நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

வழக்கமாக, அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ மரணமடையும் போது, அரசு அலுவலகக் கட்டடங்கள், அதன் வளாகங்கள், அமெரிக்க தூதரகங்கள், பாதுகாப்புப் படை அலுவலகங்களில் தேசியக் கொடி 30 நாள்களுக்கு அரைக்கம்பத்தில்தான் பறக்கவிடப்படும்.

அதன்படி, தற்போது அமெரிக்காவில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கும் தேசியக் கொடி ஜனவரி 28ஆம் தேதி வரை அவ்வாறே நீடிக்கும்.

அப்படியென்றால், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் ஜனவரி 20ஆம் தேதியும், அவரது ஆட்சித் தொடங்கிய முதல் வாரம் முழுவதும் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில்தான் பறந்துகொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக தேசியக் கொடி பறப்பது தொடர்பான உத்தரவுகளை அமெரிக்க அதிபர், ஆளுநர், மாகாண மேயர்கள் பிறப்பிக்கலாம். ஒருவேளை, டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுவதை மாற்றும்படி உத்தரவு பிறப்பிக்கலாம். அதற்கு வழிவகை உள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 1973ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சான், முன்னாள் அதிபர் லைடன் ஜான்சன் மறைவுக்கு, தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே, அமெரிக்க போர் கைதிகள் வியாத்நாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நாளன்று மட்டும் தேசியக் கொடி முழுமையாக ஏற்றப்பட்டு கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அடுத்த நாளிலிருந்து மீண்டும் எட்டு நாள்களுக்கு தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.