முகப்பு
உலகம்

அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றம்: தலிபான் அரசு அறிவிப்பு!

அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றம் செய்துகொண்ட தலிபான் அரசு.

Updated On : 21 ஜனவரி, 2025 at 6:53 AM
கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்க கைதிகளுக்கு ஈடாக ஆப்கன் கைதி ஒருவrரை அமெரிக்க அரசு பரிமாற்றம் செய்துள்ளதாக தலிபான் அரசு இன்று அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜன. 20) பதவியேற்றார். டிரம்ப் தனது முந்தைய பதவிக் காலத்தில் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு செய்து கொண்ட ஒப்பந்தம், 2021 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி அமைவதற்கு வழிவகுத்தது.

கடந்த நவம்பரில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர் அமெரிக்காவுடனான உறவில் ‘இது புதிய அத்தியாயம்’ என்று தலிபான் அரசு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, ”அமெரிக்க கைதிகளுக்கு ஈடாக அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஆப்கன் போராளி கான் முகமது விடுதலை செய்யப்பட்டு நாட்டுக்குத் திரும்பியுள்ளார்” என ஆப்கன் வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆயுள் தண்டனைக் கைதியான முகமது கான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னிய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு ஈடாக அனுப்பப்பட்ட அமெரிக்க கைதிகள் குறித்த விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

கைதிகள் பரிமாற்றத்தை "பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு" என்று குறிப்பிட்டுள்ள தலிபான் அரசு, இந்த விஷயத்தில் பாலமாக இருந்த அண்மை நாடான கத்தாரின் பங்கிற்கு நன்றியைத் தெரிவித்துள்ளது.

மேலும், "இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பானதாக்கி, அதனை மேம்படுத்த பங்களிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆப்கன் அரசு நேர்மறையானதாகக் கருதுகிறது" தலிபான் அரசு குறிப்பிட்டுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →