இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சண்டை 6-வது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒத்துழைக்காமல் சண்டையிட்டு வருகின்றன.
ஈரான் மீது கடந்த 13 ஆம் தேதி திடீரென தாக்குதல் தொடுத்த இஸ்ரேல் தனது ஆதிக்கத்தைத் தொடந்து வருகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்கி அழித்தது.
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் ஈரானின் ராணுவத் தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள் என பலர் கொல்லப்பட்டனர். எரிவாயு சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிடங்கையும் தாக்கியது. இந்த எண்ணெய் கிடங்கு தொடர்ந்து பற்றி எரிந்துவருகிறது.
இஸ்ரேல் நடத்திய இந்த மனிதத் தன்மையற்ற தாக்குதல்களில் ஈரானைச் சேர்ந்த 585-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் குழு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் குழு, பலியானவர்களில் 239 பேர் பொதுமக்கள் என்றும், 126 பேர் பாதுகாப்புப் பணியாளர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.