முகப்பு
உலகம்

அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு - பாகிஸ்தான் அரசு பரிந்துரை!

அமெரிக்க அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ளது.

Updated On : 21 ஜூன், 2025 at 6:58 AM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றார்.

இருப்பினும், அந்தத் தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நிறுத்தியதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்தப் போரை நிறுத்தியதற்கு பாகிஸ்தான் அரசு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், கடந்த சில நாள்களுக்கும் முன்பு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், அவரை பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ”பாகிஸ்தான் அரசு அதிபர் டொனால்ட் ஜே டிரம்ப்புக்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைக்கிறது”, என எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

“இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலில், அவரது தார்மீக தலையீடு, முக்கிய தலைமைப் பண்பு ஆகியவற்றை அங்கீகரித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க, பாகிஸ்தான் அரசு முறையாகப் பரிந்துரைக்கின்றது” எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அதிபர் டிரம்ப்புக்கு புகழாரம் சூட்டிய பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் தீர்வுக்காண அவரது நேர்மையான ஒத்துழைப்பை அங்கீகரிப்பதாகவும் கூறியுள்ளது.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் போன்ற பல நாடுகளுக்கு இடையிலான மோதல்களையும் பதட்டத்தையும் தணிக்க உதவிய தனக்கு நோபல் பரிசு கிடைக்காது என அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது! - டிரம்ப் ஆதங்கம்

முழு கட்டுரையைப் படிக்க →