ஆபரேஷன் சிந்தூர் பாணியில் ஈரானில் அமெரிக்கா நள்ளிரவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 22) தெரிவித்துள்ளது.
ஈரானின் அணு ஆயுத உள்கட்டமைப்புகளைத் தகர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்துவரும் போா் மேலும் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் பலத்த தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவும் நேரடியாக இன்று அதிகாலை ஈரானில் தாக்குதலை தொடங்கியுள்ளது.
அதன்கீழ், “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” நடவடிக்கைகளில் முதல்கட்டமாக ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளவாடங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை மிகவும் கடினமானதொரு அபாயம் நிறைந்த தாக்குதல் என்றும், இதனை வெற்றிகரமாக அமெரிக்க படைகள் கூட்டாகச் செய்து முடித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது பெண்டகன்.
“ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” நடவடிக்கை பற்றி அமெரிக்க அரசு நிர்வாகத்தில் குறிப்பிட்ட சில முக்கிய நபர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்ததாகவும், ஈரானில் ஞாயிற்றுக்கிழமை(இன்று - ஜூன் 22) அதிகாலையில், அதாவது ஈரானிய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவில் , தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் பெண்டகன் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.