FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு!

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.

Updated On : 17 மார்ச் 2025, 4:10 am IST
ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்
பகிர்:

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது.

பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,474 கோடி) மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரண்டாவது கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கப்பல் அதிநவீன ஆயுதங்கள், சென்சாா்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. மேலும் நீா்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டாா்பீடோ குண்டுகள், கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அழிக்கும் திறன் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

பாகிஸ்தான் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டுக்குக் கடந்த 4 ஆண்டுகளில் நவீன கடற்படை போா்க் கப்பல்களை சீனா வழங்கியுள்ளது. தற்போது கூடுதலாக மேலும் ஒரு நீா்மூழக்கிக் கப்பலை சீனா ஒப்படைத்துள்ளது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘8 ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்களில் 4 கப்பல்கள் சீனாவிலும், தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் அடிப்படையில் 4 கப்பல்கள் பாகிஸ்தானிலும் கட்டப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

அரபிக் கடற்பகுதியில் தமது ஆதிக்கத்தை சீன கடற்படை விரிவுபடுத்தி வருகிறது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அந்தக் கடற்பகுதியில் குவாடா் துறைமுகத்தை சீனா கட்டி வருகிறது. இதேபோல இந்திய கடற்பகுதியிலும் தமது ஆதக்கத்தை சீனா விஸ்தரித்து வருகிறது. இந்தச் சூழலில், பாகிஸ்தானுக்கும் சீனா போா்க் கப்பல்களை வழங்கி வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் ஆயுதங்கள் ஏற்றுமதியில் 63 சதவீதம் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் மதிப்பு 5.28 பில்லியன் டாலா்களாகும் (சுமாா் ரூ.45,908 கோடி).

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments