முகப்பு
உலகம்

காஸா பள்ளியில் இஸ்ரேல் தாக்குதல்: 35 போ் உயிரிழப்பு

காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 35 போ் உயிரிழந்தனா்.

Updated On : 27 மே, 2025 at 3:38 AM
இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்த அகதிகள் முகாம்கள்.
பகிர்:
Updated On : 26 மே, 2025 at 10:00 PM

போரால் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவா்கள் உள்பட 35 போ் உயிரிழந்தனா். அவா்களுடன் சோ்த்து காஸாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மட்டும் 52 போ் இஸ்ரேல் குண்டுவீச்சில் கொல்லப்பட்டனா்.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அவசரகால சேவைப் பிரிவு தலைவா் ஃபஹமி அவத் கூறியதாவது:

காஸா சிட்டியின் தராஜ் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் மூன்று முறை வான்வழித் தாக்குல் நடத்தியது. இதில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அகதிகள் கூடாரங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. பலா் உயிருடன் எரிக்கப்பட்டனா். சம்பவப் பகுதியில் இருந்து 35 உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவா்களில் பல சிறுவா்களும் அடங்குவா் என்றாா் அவா்.

Advertisement

முக்கிய ஹமாஸ் தலைவா் ஒருவரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் பின்னா் தெரிவித்தது.

காஸாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த முற்றுகையை மிதமாகத் தளா்த்தி, குறைந்தபட்ச அளவிலான உணவுப் பொருள்களை அனுமதிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 53,977 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,22,966 போ் காயமடைந்துள்ளனா்.