உலகில் முதல்முறை! ரூ.88 லட்சம் கோடி ஊதியம் பெறும் எலான் மஸ்க்!
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுவது குறித்து...
உலகில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88 லட்சம் கோடி) அளவிலான ஊதியம், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கிற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்கிற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வரலாற்றில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊதியம் வழங்க டெஸ்லாவின் 75 சதவிகித பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்துக்கு எலான் மஸ்க் முன்வைத்துள்ள தொழில்நுட்ப இலக்குகளை அடைவதற்கும், அவர் டெஸ்லாவில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவும், இந்த ஊதியத்தை வழங்க பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
எலான் மஸ்கிற்கு ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வழங்கப்பட அவரது தலைமையில் டெஸ்லா நிறுவனம் அடையவேண்டிய தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இலக்குகளை முன்வைத்து ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் 2 கோடி டெஸ்லா வாகனங்கள் உருவாக்கப்பட்டு விற்பனைச் செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது, கடந்த 12 ஆண்டுகளில் டெஸ்லா நிறுவனம் தயாரித்த மொத்த வாகனங்களின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும்.
இத்துடன், டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டுமெனவும், அவரது தலைமையிலான டெஸ்லா நிறுவனம் சுமார் 10 லட்சம் ரோபோக்களை தயாரித்து விநியோகிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகின் முதல் டிரில்லியன் பணக்காரராக உருவாகும் வாய்ப்பு எலான் மஸ்கிற்கு கிடைத்துள்ளது.
முன்னதாக, எலான் மஸ்கிற்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஊதியம் வழங்குவதை எதிர்த்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மெலிஸா புயல்: கியூபா, ஜமைக்காவுக்கு 20 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய இந்தியா!