முகப்பு
உலகம்

இலங்கை வெள்ளம்: கிரிக்கெட் திடலில் மக்கள் தஞ்சம் அடைந்தார்களா? உண்மை என்ன?

தலைநகர் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் திடலில் கூடாரம் அமைத்து மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஏஐ புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவது குறித்து..

Updated On : 30 நவம்பர், 2025 at 5:25 AM
பேரிடர் முகாமாக மாறியதாக பகிரப்பட்டு வரும் கிரிக்கெட் திடலின் புகைப்படம் (ஏஐ)
பகிர்:

இலங்கையில் தொடர் மழை பெய்து வருவதால், வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் கிரிக்கெட் திடலில் தஞ்சமடைந்துள்ளதாக பகிரப்படும் புகைப்படங்கள் பொய்யானவை எனத் தெரியவந்துள்ளது.

தலைநகர் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் திடலில் கூடாரம் அமைத்து மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதைப்போன்று பகிரப்படும் படங்கள் செய்யறிவால் உருவாக்கப்பட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் தொடர்பான செய்திகளை வழங்கி வரும் இர்ஷாத் இம்தியாஸ் இதனைப் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே நடைபெறவுள்ளன. இதில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா திடலும் ஒன்றாகும். தற்போது அந்தத் திடல் நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக பகிரப்படும் புகைப்படங்கள் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் உருவான டிட்வா புயலால் இலங்கை முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கம்பளை, நுவரெலியா அம்பாறை, கண்டி, கங்கொடை உள்ளிட்டப் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

இலங்கையில் டிட்வா புயலால் இதுவரை 153 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனத் தெரிகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 20,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பேரிடர் மீட்புப் படையினர் பகிர்ந்தளித்து வருகின்றனர்.

இலங்கைக்கு உதவும் வகையில் 21 டன் ரேஷன் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை மத்திய அரசு நேற்று அனுப்பிவைத்தது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 80 வீரர்கள், ஹெலிகாப்டர்கள் உள்பட அவசர கால கருவிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | தாய்லாந்து வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 162 - பாதுகாக்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய அரசு!

summary

Cyclone Ditwah Sri Lanka People take shelter in the cricket ground

முழு கட்டுரையைப் படிக்க →