பாகிஸ்தான்: மோதலில் 11 ராணுவ வீரர்கள்; 19 பயங்கரவாதிகள் பலி!
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடனான மோதலில் 11 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...
பாகிஸ்தானில், பயங்கரவாதிகளுடனான மோதலில், 11 ராணுவ வீரர்கள் மற்றும் 19 பயங்கரவாதிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஒராக்சாய் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாகிஸ்தான் ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நேற்று (அக்.7) இரவு முதல் இன்று அதிகாலை வரையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினண்ட் கர்னல் ஜுனைத் தாரிக் (வயது 39) மற்றும் மேஜர் தய்யிப் ராஹத் (33) ஆகியோர் உள்பட 11 வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும், 19 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தாக்குதல் நடைபெற்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் எனும் பயங்கரவாத அமைப்பு, கடந்த 2022 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது. அதன்பின்னர், கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பல்கலை. பேராசிரியர்கள் மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!