தீபாவளிப் பண்டிகையில் அனைவரது மனதிலுமுள்ள இருள் அகலட்டும்; ஒளி பரவட்டும்! -இலங்கை அதிபர்
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘அனைவரது மனதிலுமுள்ள இருள் அகலட்டும்; ஒளி பரவட்டும்' என்று இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், ‘உலகெங்கிலுமுள்ள ஹிந்துக்களால் மிகுந்த பக்தியுடன் தீபாவளி பண்டிகை இன்று(திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. பகவான் விஷ்ணு அரக்கன் நரகாசுரனை வதைத்ததன் நினைவாக பக்தர்கள் அனுசரிக்கும் இந்த கொண்டாட்டத்தில் பிரார்த்திக்கும் போது, அதர்மத்தை வீழ்த்தி தர்மம் வெற்றியடையும் என்று கொள்கிறோம்; ஒவ்வொருத்தருடைய மனங்களிலும் உள்ள இருள் அகலட்டும், ஒளி பரவட்டும்’ என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
மேலும் அவர், ‘அனைத்து மத, இன தீவிரவாதத்தையும் கடந்து வர நாங்கள் செயல்படுகிறோம் என்பதை வலியுறுத்துகிறோம். அதன்மூலம், சமூக நீதியை நிலைநாட்டவும், ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரமாக இடையூறின்றி அனைத்து குடிமை, அரசியல், கலாசார உரிமைகளை அனுபவிக்கக்கூடியதொரு பாதுகாப்பான நாட்டை கட்டமைக்கவும் நாங்கள் செயல்படுகிறோம் என்பதையும் வலியுறுத்துகிறோம். அப்போதே, அனைவரின் சுதந்திரமும் மாண்பும் பாதுகாக்கப்படும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.