ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! - டிரம்ப்
ஹூண்டாய் நிறுவன ரெய்டு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு பற்றி...
அமெரிக்காவின் ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 பேர் கைதுக்குப் பிறகு, அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தி பயிற்சி அளிக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய ஹூண்டாய் பேட்டரி தொழிற்சாலையில் கடந்த வாரம் அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் 475 பேர் சட்டவிரோதமாக பணியாற்றியது தெரிய வந்துள்ளது. பலரும் விசா காலம் முடிவடைந்து அங்கு பணியாற்றி வந்துள்ளனர்.
இதையடுத்து சட்டவிரோதமாக பணியாற்றியவர்களை அமெரிக்க அதிகாரிகள் கை விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்களில் பெரும்பாலானோர் தென் கொரியா நாட்டைச் சேர்ந்தவர்கள்.
Advertisement
Advertisement
கைது செய்யப்பட்டுள்ள தென் கொரியாவைச் சேர்ந்தவர்களை மீட்க அந்த நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தென் கொரியா, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு கைதானவர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
"அவர்கள் சட்டவிரோதமாக பணியாற்றியவர்கள். அதிகாரிகள் தங்கள் வேலையைத்தான் செய்துள்ளனர்" என்று டிரம்ப் இதுபற்றி கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக டிரம்ப், அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்பதாகவும் அதேநேரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள், அமெரிக்காவின் குடியேற்றச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
அமெரிக்காவின் ஜார்ஜியா ஹூண்டாய் பேட்டரி தொழிற்சாலையில் நடைபெற்ற ரெய்டுக்குப் பிறகு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அமெரிக்காவின் குடியேற்றச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதுதான்.
வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க, சிறந்த தொழில்நுட்ப திறன்மிக்க உங்கள் நாட்டினரை அமெரிக்காவுக்கு சட்டப்படி கொண்டுவர நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.
அதற்கு பதிலாக உங்களிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால், நீங்கள் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நாம் அனைவரும் கடினமாக உழைத்து இந்த நாட்டை உற்பத்தி ரீதியாக மட்டுமின்றி, நம்மிடையே உள்ள ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்விதமாக ஒன்றாக உழைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
Foreign companies need to train Americans after Hyundai raid, says Trump
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.