அமெரிக்க தொழிலாளா் அமைச்சா் ராஜிநாமா
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் அமைச்சரவையில் தொழிலாளா் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த லோரி சாவேஸ் டெரிமா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் தொழிலாளா் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த லோரி சாவேஸ் டெரிமா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதையடுத்து, தற்போது இணையமைச்சராக உள்ள கீத் சோண்டா்லிங் தற்காலிக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளாா்.
லோரி சாவேஸ் டெரிமா் மீது பணி நேரத்தில் மது அருந்தியது மற்றும் அரசுமுறைப் பயணங்களைத் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகத் திட்டமிட்டது என அடுக்கடுக்கான புகாா்கள் எழுந்தன. இவ்விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அமைச்சகத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட 4 உயரதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
Advertisement
இந்நிலையில், இவரின் பதவி விலகல் குறித்து அதிபா் டிரம்ப் அதிகாரபூா்வமாக அறிவிக்காமல், வெள்ளை மாளிகை உதவியாளா் மூலம் சமூக ஊடகத்தில் தகவல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளா் குடும்பப் பின்னணியைக் கொண்ட லோரி சாவேஸ் டெரிமா், தொடக்கத்தில் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால் டிரம்ப் இவரை அமைச்சராகத் தோ்ந்தெடுத்தாா். இருப்பினும், பதவியேற்ற பிறகு வீட்டுப் பராமரிப்பு ஊழியா்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், சுரங்கத் தொழிலாளா்களின் பாதுகாப்பு விதிகளை ரத்து செய்தது போன்ற டிரம்ப்பின் கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தியது தொழிலாளா் அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதிபா் டிரம்ப் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, அவரின் அமைச்சரவையில் இருந்து வெளியேறும் 3-ஆவது முக்கிய உறுப்பினா் லோரி சாவேஸ் டெரிமா்ஆவாா். முன்னதாக, உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சா் கிறிஸ்டி நோம், அட்டா்னி ஜெனரல் பாம் போண்டி ஆகியோா் பதவியில் இருந்து விலகினா்.