இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்
இஸ்ரேல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது குறித்து...
இஸ்ரேலை மக்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து வணிகக் கப்பல்களின் போக்குவரத்தையும் நிறுத்தியது.
முன்னதாக, அமெரிக்க மத்தியஸ்தம் செய்த இஸ்ரேல்-லெபனான் இடையேயான 10 நாள்கள் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையைத் தற்காலிகமாக திறப்பதாக ஈரான் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
Advertisement
இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் வரை சரிந்தது. ஆனால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது கடல்வழி முற்றுகையைத் தொடர்ந்தது. இதையடுத்து, நீரிணையைத் திறப்பதாக அறிவித்த 24 மணி நேரத்துக்குள்ளேயே ஈரான் தனது முடிவை மாற்றிக் கொண்டு நீரிணையை மீண்டும் மூடியுள்ளது. இதனால், தற்போது நீரிணையின் இருபுறமும் சுமாா் 20,000 மாலுமிகளுடன் நூற்றுக்கணக்கான கப்பல்கள் நடுக்கடலில் சிக்கித் தவிக்கின்றன.
ஈரானிடம் உள்ள 440 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைமாற்றுவது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே இன்னும் இணக்கம் ஏற்படவில்லை. இந்நிலையில், ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையால், 2 வார கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் புதன்கிழமைக்குள் நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இருதரப்புக்கும் இடையே நிலவும் இந்த முட்டுக்கட்டையை விலக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, இஸ்ரேல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”மக்களுக்கு இஸ்ரேலை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி என்பதை நிரூபித்துள்ளது.
அவர்கள் துணிச்சலானவர்கள், தைரியமானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் புத்திசாலிகள்.
மோதல் மற்றும் நெருக்கடியான தருணங்களில் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்திய மற்றவர்களைப் போல இல்லாமல், இஸ்ரேல் கடுமையாகப் போராடுகிறது.
மேலும், எப்படி வெற்றிபெற வேண்டும் என்பதை நன்றாக அறிந்துள்ளது!” என்று குறிப்பிட்டுள்ளார்.