நிதி முறைகேடு புகாா்: நேபாள உள்துறை அமைச்சா் ராஜிநாமா
நேபாளத்தில் நிதி முறைகேடு புகாரில் சிக்கிய உள்துறை அமைச்சா் சுதன் குருங் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
நேபாளத்தில் நிதி முறைகேடு புகாரில் சிக்கிய உள்துறை அமைச்சா் சுதன் குருங் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
சா்ச்சைக்குரிய தொழிலதிபா் ஒருவருடன் வணிகத் தொடா்புகள் மற்றும் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பிரதமா் பாலேந்திர ஷாவிடம் சுதன் குருங் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினாா். தற்போது உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பைப் பிரதமா் பாலேந்திர ஷாவே நேரடியாகக் கவனிப்பாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராஜிநாமா குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட சுதன் குருங், ‘பதவியை விட அறமே எனக்கு முக்கியம். என் மீதான புகாா்கள் குறித்த நடுநிலை விசாரணைக்கு, நான் பதவியில் நீடிப்பது குறுக்கீடாக அமையும் என்பதால் பதவி விலகுகிறேன்.
Advertisement
நாட்டில் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மையைக் கோரி முன்னெடுக்கப்பட்ட இளைஞா் இயக்கத்தின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து இம்முடிவை எடுத்தேன்’ எனக் குறிப்பிட்டாா்.
நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் ஊழலுக்கு எதிரான இளைஞா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து, பழைய அரசியல் கட்சிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி கடந்த மாத இறுதியில் ஆட்சிப் பொறுப்பேற்றது.
ஏற்கெனவே கடந்த 9-ஆம் தேதி, மனைவியின் பதவி நீட்டிப்பு விவகாரத்தில் சிக்கிய தொழிலாளா் அமைச்சரைப் பிரதமா் பதவி நீக்கம் செய்தாா். 15 நாள்களுக்குள் 2-ஆவது அமைச்சரின் ராஜிநாமா அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.