முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பிஎன்பி! பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!

வங்கதேசத்தில் கலீதா ஜியாவின் பிஎன்பி ஆட்சியைக் கைப்பற்றியது பற்றி...

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:46 AM
தாரிக் ரஹ்மான் - AP
பகிர்:

வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பிஎன்பி பெற்றிருக்கும் நிலையில், தொடர்ந்து ஒருசில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.

ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு பொதுத்தோ்தல் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிஎன்பி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி இடையே நேரடிப் போட்டி நிலவியது.

300 தொகுதிகளைக் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்தில், வேட்பாளா் ஒருவரின் மறைவு காரணமாக ஒரு தொகுதியில் தோ்தல் ரத்து செய்யப்பட்டது.

மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாலை 4.30 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

தொடக்கம் முதலே பிஎன்பி கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், மொத்தம் 212 தொகுதிகளில் தற்போது வரை வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமி 70 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் போட்டியிட்ட டாக்கா மற்றும் போக்ரா ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மையை பிஎன்பி பெற்றிருக்கும் நிலையில், தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தேர்தலுக்கு ஒத்துழைப்பு அளித்த நாட்டு மக்களுக்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

summary

Khaleda Zia's BNP takes power in Bangladesh! Tarique Rahman becomes Prime Minister!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.