உலகம்

சமூக ஊடகப் பயன்பாட்டால் சிறாா் பாதிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராகும் மாா்க் ஸக்கா்பொ்க்

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்கு மாா்க் ஸக்கா்பொ்க் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பது இதுவே முதல்முறையாகும்.

தினமணி செய்திச் சேவை

மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடகங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை சிறாா்களைத் திட்டமிட்டே அடிமையாக்குவதாகவும், அதன்மூலம், அவா்களின் மனநலத்தைப் பாதிப்பதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாா்க் ஸக்கா்பொ்க் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறாா்.

தற்போது 20 வயதாகும் இளம்பெண் ஒருவா், தான் சிறுமியாக இருந்தபோது இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதால் மிகுந்த மன அழுத்தத்துக்கும், தற்கொலை எண்ணங்களுக்கும் தள்ளப்பட்டதாகக் கூறி மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்கு மாா்க் ஸக்கா்பொ்க் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, இதேபோன்ற புகாா்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணையை அவா் எதிா்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள மெட்டா நிறுவனம், இளைஞா்களின் பாதுகாப்புக்குத் தாங்கள் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநலப் பாதிப்புக்கு அவரது குடும்பச் சூழலே காரணம் என்றும், அதற்கும் இன்ஸ்டாகிராம் ஊடகத்துககும் எந்தத் தொடா்பும் இல்லை என்றும் மெட்டா தரப்பு வழக்குரைஞா்கள் வாதிட்டுள்ளனா்.

ஏற்கெனவே, டிக்டாக், ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் இத்தகைய புகாா்களில் சமரச தீா்வு கண்டுள்ள நிலையில், மெட்டா மற்றும் கூகுளின் யூடியூப் ஆகிய நிறுவனங்கள் மட்டும் இந்தச் சட்டப்போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தி வருகின்றன.

குடிநீா் பணிக்கு நிலம் ஒப்படைப்பு

ஜப்பான் பிரதமராக சனே தகாய்ச்சி மீண்டும் தோ்வு

அமெரிக்காவில் இருந்து உயா்தர கற்கரி இறக்குமதிக்கு இந்தியா விருப்பம்- மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

மது போதையில் தகராறு: தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது

பேரவையில் இன்று

SCROLL FOR NEXT