FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

முகநூல் அளித்த முகவரி

'முகநூலில் 2015-ஆம் ஆண்டில் 'ராஜபாளையம் பேஸ்புக் பிரண்ட்ஸ்' என்ற குழுவைத் தொடங்கினோம்.

Updated On : 12 ஏப்ரல் 2026, 4:10 am IST
பகிர்:

பொ.ஜெயச்சந்திரன்

'முகநூலில் 2015-ஆம் ஆண்டில் 'ராஜபாளையம் பேஸ்புக் பிரண்ட்ஸ்' என்ற குழுவைத் தொடங்கினோம். அதன் வாயிலாக இன்று வரை ஆதரவற்றோருக்கு உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்தல், ரத்த தான முகாம்கள் நடத்துதல், மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றோரை காவல் துறை அனுமதிக் கடிதம் பெற்று காப்பகங்களில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துவருகிறோம்' என்கிறார் சமூக ஆர்வலர் க.செல்வகுமார்.

விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த இவர், முகநூலில் நண்பர்களைச் சேர்த்து சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

Advertisement

'சுவச் பாரத் மிஷன்' திட்டத்தில் தன்னார்வலராகவும் செயல்படும் செல்வகுமாரிடம் பேசியபோது:

'என்னுடைய சமூகப் பணி படிக்கும் காலத்திலேயே தொடங்கிவிட்டது. திரைப்பட இயக்குநர்கள் சமுத்திரக்கனி, ஜிப்சி ராஜ்குமார் என்னுடைய வகுப்புத் தோழர்கள். ராஜுக்கள் கல்லூரியில் படிக்கும்போது, அறிவொளி இயக்கத்தில் செயல்பட்டேன்.

1993-ஆம் ஆண்டு ஆசிரியர்கள் மாரியப்பன், சிவகுமார், விஜயராணி உள்ளிட்டோருடன் இணைந்து ஏழை மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்தினோம். பி.எட். படிக்க ஆசைப்பட்டபோது, வறுமையால் கானல் நீரானது.

உதவிகள்: 2005-ஆம் ஆண்டில் மனித நேயம் நற்பணி இயக்கச் செயலாளராகி, சமூகப் பணியைச் செய்தோம். 2015-ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளப் பெருக்கின்போது முகநூலைப் பயன்படுத்தி உதவும் எண்ணம் உருவானது. 'ராஜபாளையம் பேஸ்புக் பிரண்ட்ஸ்' மூலம் நிவாரணப் பொருள்களைப் பெற்று அனுப்பினோம்.

கஜா புயலின்போது, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று 900-க்கும் மேற்பட்டவர்களுக்கு அடிப்படை உதவிகளைச் செய்தோம். கேரள வெள்ளத்தின்போதும் உதவிகளை வழங்கினோம்.

2018-ஆம் ஆண்டில் முகநூல் குழுவை 'பகிர்வு அறக்கட்டளை' என்ற சமூக நம்பிக்கை இயக்கமாக மாற்றினோம். மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை நலத் திட்டங்களுக்காக வழங்குகிறார்கள்.

அது சரியானவர்களிடம் போய்ச் சேர வேண்டும் என்பதில் நாங்கள் பொறுப்புடன் இருக்கிறோம். அதனால்தான் அனைத்து விவரங்களையும் வெளிப்படையாகவே பகிர்கிறோம். இதுவரை 280-க்கும் மேற்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய கல்லூரி மாணவர்களுக்கு உதவி செய்துள்ளோம்.

நீட் தேர்வில் தேவையான மதிப்பெண் பெற்றிருந்தும் வறுமையால் உயர்கல்வி தொடர முடியாத நிலையில் இருந்த ஒரு மாணவிக்கு உதவினோம்.

நாள்தோறும் உணவு: கரோனா காலத்தில் இருந்து இடைநிற்றல் இல்லாமல் நாள்தோறும் 25 பேருக்கு சமூக சேவகி கோ.ஜெயலெட்சுமியோடு இணைந்து இலவசமாக உணவு வழங்கி வருகிறோம். இந்த உணவு வழங்குதல் ஏப்ரல் 10-இல் 2,923-வது நாளைத் தொட்டது. கரோனா காலமான 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் ஜூன் 23 வரை தொடர்ச்சியாக அரிசி, மளிகைப் பொருள்களை சுமார் 1, 500 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளோம்.

விருதுநகர் புத்தகத் திருவிழாவில், அரசுப் பள்ளிகளில் பயிலும் 100 மாணவர்கள் தலா 100 ரூபாய் மதிப்பில் நூல்களைத் தேர்ந்தெடுத்துப் பெற உதவுகிறோம்.

முகநூல் குழுவில் 36 ஆயிரம் உறுப்பினர்கள்: 'ராஜபாளையம் பேஸ்புக் பிரண்ட்ஸ்' குழுவில் தற்போது 36ஆயிரம் பேர் உறுப்பினர்கள் உள்ளனர். பயனாளிக்கு உதவ வேண்டி முகநூல் பக்கத்தில் பதிந்தால், முகநூல் நண்பர்கள் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி விடுவர்.

தேவை பூர்த்தியானவுடன் வழங்குவதை நிறுத்திவிடச் சொல்லுவேன். பேச்சாளர்கள் கவிதா ஜவஹர், பாரதி கிருஷ்ணகுமார், திரைப்படப் பாடல் ஆசிரியர் பழநிபாரதி போன்ற முக்கிய ஆளுமைகள் எங்களுடைய பணியைப் பாராட்டி காணொலிகளை வெளியிட்டுள்ளனர். எதிர்காலத்தில் முதியோர் இல்லம் அமைப்பதே லட்சியம்.

2025-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 'சிறந்த சமூகச் செயற்பாட்டாளர்', திருவள்ளுவர் மன்றம் சார்பில் 'சிறந்த சேவையாளர்', சேக்கிழார் மன்றம் சார்பில் 'பசுமைக் காவலர்', மணிமேகலை மன்றம் சார்பில் 'சேவைச் செம்மல்' , சென்னை படைப்பு அமைப்பின் சார்பில் 'சமூக விழிப்புணர்வாளர்' , ராஜபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் 'பசிப்பிணி தீர்த்த நாயகன்' உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன்' என்கிறார் செல்வகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments