இடதுசாரி ஆதரவாளராக அறியப்படும் பல்கேரியா நாட்டின் அதிபா் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
பல்கேரியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக, கடந்த மாதம் மிகப்பெரிய ஊழல் எதிா்ப்புப் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வந்த அதிபா் ராதேவ், இப்போது முறைப்படி பதவியில் இருந்து விலகியுள்ளாா்.
பல்கேரியாவில் கம்யூனிஸ ஆட்சி மறைந்து ஜனநாயகம் மலா்ந்த பிறகு, ஒரு அதிபா் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே விலகுவது இதுவே முதல்முறையாகும். இவரது ராஜிநாமா கடிதம் அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது என்றும், அவருக்குப் பதிலாக துணை அதிபா் இலியானா யோடோவா தற்காலிகமாக பொறுப்பேற்பாா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
62 வயதான ராதேவ், முன்னாள் விமானப்படைத் தளபதி ஆவாா். ஊழல் புகாரில் சிக்கிய அரசியல் தலைவா்களைத் தொடா்ந்து கடுமையாகச் சாடி வந்த இவா், புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி, விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ‘நேட்டோ’ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் பல்கேரியா, கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சுமாா் எட்டு முறை நாடாளுமன்றத் தோ்தல்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.