ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?
இந்திய மாணவ, மாணவிகள் நிலைமையை விவரிக்கும் காணொலி வெளியாகி பரபரப்பு...
ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகள் நிலைமையை விவரிக்கும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே இப்போது பூதாகரமாகப் போா் வெடித்துள்ளது.
ஈரான் போரில் உச்சகட்ட பதற்றமாக, இஸ்ரேல் - அமெரிக்க படையின் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி (86) கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி அளிக்கும் என்று ஈரான் சூளுரைத்துள்ளது.
இதனால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஈரானில் உள்ள இந்திய மாணவிகள் நிலைமையை விவரிக்கும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் உள்ள இந்திய மாணவியொருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள காணொலி வழியான பேட்டியில் பேசியிருப்பதாவது : “இங்கு எங்களுக்கு இணையதள சேவை வசதி இல்லை. சுமார் ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மிகுந்த இடையூறாக உள்ளது.
எங்களை ஈரானை விட்டு வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தபோதிலும், எங்கள் பல்கலைக்கழகம் அதற்கு முறையாக ஒத்துழைக்கவில்லை. ‘நீங்கள் (மாணவிகள்) வெளியேறினால், தேர்வில் வெற்றியடைய முடியாது, தோல்வியடைவீர்கள்’ என்றனர். பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் இங்கு கடந்த 15 நாள்களாக மூடப்பட்டுள்ளன.
இந்நேரத்தில் தூதரகத்துக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். அவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருக்கிறோம். ஆனால், அவர்களும் இப்போது உதவும் சூழலில் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், பிற நாடுகளுக்கு இங்குள்ள வான்வெளி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, எங்களை வெளியேற்ற முடியாத சூழல் நிலவுகிறது” என்றார்.