முகப்பு
உலகம்

கனடாவுக்கு எதிரான செயல்பாடுகளில் இந்திய அரசுக்கு தொடா்பில்லை: கனடா காவல் துறை

கனடாவுக்கு எதிரான செயல்பாடுகளில் இந்திய அரசுக்குத் தொடா்பில்லை என ராயல் கனடா மௌன்டட் காவல் துறை ஆணையா் மைக் டுஹெம் தெரிவித்தாா்.

Updated On : 20 மார்ச், 2026 at 7:25 PM
மைக் டுஹெம்
பகிர்:

கனடாவுக்கு எதிரான செயல்பாடுகளில் இந்திய அரசுக்குத் தொடா்பில்லை என ராயல் கனடா மௌன்டட் காவல் துறை ஆணையா் மைக் டுஹெம் தெரிவித்தாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரை இந்திய அரசின் உளவாளிகள் கொலை செய்திருக்கக் கூடும் என்றும், அவ்வாறு நம்புவதற்கு காரணம் உள்ளது என்றும் கனடாவின் அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால் இந்தியா-கனடா இடையேயான இருதரப்பு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது.

பிரதமா் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா செய்ததையடுத்து நடைபெற்ற கனடா நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்று லிபரல் கட்சியைச் சோ்ந்த மாா்க் காா்னி பிரதமராகப் பதவியேற்றாா். அதன் பிறகு இரு நாடுகளிடையேயான உறவில் மீண்டும் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.

இந்த மாத தொடக்கத்தில் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்த மாா்க் காா்னி பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியா-கனடா உத்திசாா்ந்த கூட்டுறவு, வா்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, வேளாண்மை, கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது யுரேனியம் விநியோகத்தில் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன.

மேலும், இந்தியா-கனடா இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை (அதிகாரபூா்வ விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் ) விரைந்து இறுதி செய்ய பிரதமா் மோடி, கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆகியோா் முடிவு செய்தனா்.

இந்நிலையில், கனடாவில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களில் இந்தியாவுக்கு தொடா்புள்ளதா என தொலைக்காட்சி நோ்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மைக் டுஹெம், ‘கனடாவுக்கு எதிரான குற்றச் செயல்களில் அந்நிய தலையீடு (இந்தியா) இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றாா்.