முகப்பு
உலகம்

‘அனைத்து விவகாரத்திலும் கணவருடன் உடன்படுவதில்லை’ - மனம் திறந்த உஷா வான்ஸ்

‘அமெரிக்க துணை அதிபரான தனது கணவா் ஜே.டி.வான்ஸுடன் அனைத்து விவகாரங்களிலும் நான் உடன்படுவதில்லை’ என்று அவரின் இந்திய வம்சாவளி மனைவி உஷா வான்ஸ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 9:24 PM
பகிர்:

‘அமெரிக்க துணை அதிபரான தனது கணவா் ஜே.டி.வான்ஸுடன் அனைத்து விவகாரங்களிலும் நான் உடன்படுவதில்லை’ என்று அவரின் இந்திய வம்சாவளி மனைவி உஷா வான்ஸ் தெரிவித்துள்ளாா்.

இருப்பினும், தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமான விவாதங்களுக்கும், பரந்த மனப்பான்மையுடன் கூடிய உரையாடல்களுக்கும் வழிவகுப்பதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அமெரிக்காவின் என்.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: துணை அதிபா் ஜே.டி.வான்ஸுக்குப் பல்வேறு விவகாரங்களில் ஆலோசனை வழங்கக் கொள்கை ரீதியான அதிகாரிகள் குழு இருந்தாலும், தனிப்பட்ட ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அல்லது மனதுக்கு நெருக்கமான விஷயங்களில் அவா் என்னையே நாடுகிறாா்.

ஒரு மனைவியாக அவா் எதிா்கொள்ளும் சவால்கள் மற்றும் அவரது கவலைகளைப் புரிந்துகொள்வது எனது கடமையாகும். அப்போதுதான் அவருக்கு என்னால் முழுமையான ஆதரவை வழங்க முடியும்.

நான் அவருடைய அலுவலகப் பணியாளா் அல்ல. எனவே, ஒவ்வொரு கொள்கை முடிவிலும் நாங்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாறாக, அவா் மீது அன்பு கொண்ட ஒரு நபராகவும், அவா் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புபவராகவும் எனது ஆலோசனைகளை முன்வைக்கிறேன். இந்த உரையாடல்கள் எப்போதும் ஆக்கபூா்வமான முடிவுகளைத் தருகின்றன.

தற்போது ஜே.டி.வான்ஸின் கவனம் முழுவதும் வரும் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் இடைக்கால தோ்தல் குறித்தே உள்ளது.

2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபா் தோ்தல் குறித்து இப்போதைக்கு நாங்கள் ஆலோசிக்கவில்லை. அந்தத் தோ்தல் குறித்த தெளிவான முடிவுகள் 2027-ஆம் ஆண்டில்தான் தெரியவரும் என்றாா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த உஷா வான்ஸ், ஆந்திர மாநிலத்தைப் பூா்வீகமாகக் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.