வந்தே பாரத் ரயில்களில் 1.11 கோடி பேர் பயணம்: பிரதமா் மோடி பெருமிதம்!

நாட்டில் 11 மாநிலங்களுக்கான 9 வந்தே பாரத் ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி
வந்தே பாரத் ரயில்களில் 1.11 கோடி பேர் பயணம்: பிரதமா் மோடி பெருமிதம்!

புதுதில்லி: நாட்டில் 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் ஒன்பது வந்தே பாரத் ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி, வந்தே பாரத் ரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; அவற்றில் ஏற்கனவே 1,11 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்திய ரயில்வே சாா்பில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், பிகார், மேற்கு வங்கம், கேரளம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களுக்கு மேலும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில், திருநெல்வேலி-சென்னை, விஜயவாடா-சென்னை, உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-புரி, ஜாம்நகர்-அகமதாபாத் இடையிலான 9 வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1 மணிக்கு பிரதமா் மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

துரதிர்ஷ்டவசமானது: 
11 மாநிலங்களில் உள்ள மத மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முன் மோடி தனது உரையில், வந்தே பாரத் ரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; அவற்றில் ஏற்கனவே 1,11,00,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 

ஏற்கெனவே 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 9 ரயில்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வந்தேபாரத் ரயில்கள் புதிய இந்தியாவின் புதிய உணர்வையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்துகின்றன. வேகம், உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அளவு 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளுடன் பொருந்துகிறது.

இந்த ரயில்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்திய ரயில்வே நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகவும் நம்பகமான சக பயணியாகும்.

ஒரே நாளில் ரயில்வேயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை பல நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகம்" என்று அவர் கூறினார்.

“ரயில்வேயை நவீனமயமாக்குவதில் முன்னர் அதிக கவனம் செலுத்தப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்றும், ஆனால் தனது அரசு அதன் மாற்றத்திற்காக பாடுபடுகிறது" என்று மோடி கூறினார்.

புதிய இந்தியாவின் சாதனைகள் குறித்து அனைத்து இந்தியர்களும் பெருமிதம் கொள்கிறார்கள், சந்திரயான்-3 வெற்றியால் சாமானியர்களின் எதிர்பார்ப்பு விண்ணை எட்டியுள்ளது.

ஜி20 உச்சிமாநாட்டின் வெற்றி, இந்தியாவுக்கு ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவற்றின் சக்தி உள்ளது என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

"நாட்டின் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை உலகம் பாராட்டியுள்ளது, மேலும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக அரசாங்கம் மகளிர் இடஒதுக்கிடு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியது" என்று மோடி தெரிவித்தார். 

இந்த ரயில்கள், நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குதல் ஆகிய பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் ஒரு படியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com