
அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வாசலில் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது புதன்கிழமை காலை ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
அந்த நபரை அந்த இடத்தில் இருந்தவர்கள் தாக்கினர். தாக்குதல் நடத்தியவரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
பொற்கோவில் நுழைவு வாயிலில் நடந்த இந்தச் சம்பவத்தில் சுக்பீர் சிங் பாதல் நூலிழையில் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதலில் நாராயண் சிங் சௌரா என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
2015 ஆம் ஆண்டு தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி அகல் தக்த் அவருக்கு தண்டனை விதித்தது.
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், டிசம்பர் 3 ஆம் தேதி அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில், கழுத்தில் தகடு அணிந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்து அகல் தக்த் விதித்த தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார்.
மேலும், அவருக்கு சீக்கியர்களின் குருத்வாராக்களின் சமையலறைகள் மற்றும் கழிவறைகளில் சேவகராகவும், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.
சுக்பீர் சிங் பாதல் தனது தவறுகளை ஒப்புக்கொண்டதாகவும், அகல் தக்த்திடம் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
2007 முதல் 2017 வரை பஞ்சாபில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம் ஆட்சிக் காலத்தில் ‘மதத் தவறுகள்’ செய்ததாக அகல் தக்த் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் துணை முதல்வராகப் பணியாற்றிய சுக்பீர் பாதல், 2015 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கும் தேரா ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களைத் தூண்டிய வழக்கில் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.