தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

ஆபரேஷன் சிந்தூர் குறித்த சர்ச்சையில் கைதான இன்ஸ்டா பிரபலம்: புகாரளித்தவர் மாயம்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த இன்ஸ்டா பிரபலத்துக்கு எதிராகப் புகாரளித்தவர் தற்போது மாயமாகியுள்ளார்.

News image

இன்ஸ்டா பிரபலம் ஷர்மிஸ்தா பனோலி. - PTI

Updated On :3 ஜூன் 2025, 0:13 pm IST

ஆபரேஷன் சிந்தூர் குறித்த அவதூறு விடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலத்துக்கு எதிராகப் புகாரளித்தவர் தற்போது மாயமாகியுள்ளார்.

புணே சட்டக் கல்லூரி மாணவியான ஷர்மிஸ்தா பனோலி (வயது 22) என்பவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகவும் செயலாற்றி வருகிறார். ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாலிவுட் நடிகர்கள் குறித்து வகுப்புவாத சர்ச்சையைக் கிளப்பும் வகையில் ஒரு விடியோவை இவர் பகிர்ந்து, பின்னர் அதனை நீக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கொல்கத்தா காவல் துறையினர் கடந்த மே 30 ஆம் தேதி அவரை கைது செய்தனர். இதையடுத்து, கொல்கத்தா நீதிமன்றம் வரும் ஜூன் 13 ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதன்பின்னர், பல்வேறு முக்கிய பாஜக தலைவர்களும் பனோலிக்கு தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வந்தனர். மேலும், அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்த வஜாத் கான் என்பவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், வஜாத் கானை தற்போது காணாவில்லை என அவரது குடும்பத்தினர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளனர். இத்துடன், பனோலி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து, வஜாத் கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று, வஜாத் கானுக்கு எதிராக கொல்கத்தா காவல் நிலையத்தில் ஸ்ரீராம் ஸ்வபிமன் பரிஷாத் எனும் அமைப்பின் சார்பில் புகாரளிக்கப்பட்டது.

அதில், வஜாத் கான் சமூக ஊடகங்களில், ஹிந்து சமூகத்துக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்பி வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல், அவரது சமூக வலைதளப் பதிவுகளினால், வஜாத் கான் மீது அசாம் காவல் நிலையத்திலும் புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், அசாம் காவல் துறையினர் மேற்கு வங்கம் சென்று வஜாத் கானை கைது செய்து நீதியின் முன் நிறுத்துவார்கள் என அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.