ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் பெரியகருப்பன்

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது
கே.ஆா்.பெரியகருப்பன்.
கே.ஆா்.பெரியகருப்பன்.
Published on
Updated on
1 min read

சென்னை: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை சார்பில் 49 அறிவிப்புகள் வெளியிட்டதாகவும், அதன் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், 8 ஆயிரம் சதுர அடியில் தீவுத்திடல் அருகே புதிய கட்டடம் கட்டவும், அதில் கூட்டுறவு வங்கி, நியாயவிலை கடை ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

அதேபோல், ரூ.1,10,000 கோடி வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறியவர், விவசாயிகளுக்கு பயிர்கடன் மட்டும் அல்லாமல், கால்நடைகள் வாங்குவதற்கு அதிகயளவில் கடன் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தாண்டு பயிர்கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனாளர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இதுவரை 12 ஆயிரம் பேர் கூட்டுறவுத் துறைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், காலிப்பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

குறிப்பாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்காக மத்திய அரசு கொண்டு வரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது என்றும், தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவது இல்லை, அதனால் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்தார்.

மேலும், கூட்டுறவுத்துறை சார்பில் 60 பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 35-40 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com