கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஞாயிறன்று அவருக்கு லேசாகக் காய்ச்சல் அடித்தது. உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், கரோனா பாதிப்பு உறுதியானது. இந்த வருடம் ஏற்கெனவே இருமுறை இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுப்பதற்குப் பதிலாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதனால் திங்கள் அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்குலி, இரு தவணை கரோனா தடுப்பூசிகளை ஏற்கெனவே செலுத்திக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் கரோனாவின் லேசான அறிகுறிகளை மட்டும் கொண்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார் செளரவ் கங்குலி. மேலும் பரிசோதனையின் முடிவில் ஒமைக்ரான் பாதிப்பு கங்குலிக்கு இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கங்குலிக்கு கடந்த ஜனவரி 2-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு, அகற்றப்பட்டது. ஐந்து நாள் சிகிச்சைக்குப் பிறகு, கங்குலி வீடு திரும்பினாா். அதே மாதத்தில் கங்குலிக்குக் மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் இதயத் தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய மேலும் 2 ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டன.
2021 சிறந்த வீரருக்கான ஐசிசி விருது: இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்த பரிந்துரைப் பட்டியல்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் ரூபா குருநாத்
ஆஷஸ் தொடரில் விளையாடும் ஆஸி. வீரருக்கு கரோனா பாதிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தெ.ஆ. வீரர் டி காக் திடீர் ஓய்வு: காரணம் என்ன?