ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி கடந்த மூன்று வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. 2019-ல் 7-ம் இடம், 2020-ல் 8-ம் இடம், 2021-ல் 7-ம் இடம் எனப் புள்ளிகள் பட்டியலில் இடம்பிடித்தது. இதனால் இந்த வருடம் அந்த அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஹால், அஸ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஜேம்ஸ் நீஷம் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் அணியைப் பற்றி அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் இலங்கை கேப்டனுமான குமார் சங்கக்காரா கூறியதாவது:
போட்டி நடைபெறாதபோது அணியில் செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றி அறிந்திருந்தோம். எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் எனப் பார்த்தோம். சரியான நடைமுறையின்படியே ஏலத்தில் வீரர்களைத் தேர்வு செய்தோம். வலுவான அணி உருவாக்கப்பட்டுள்ளது. வீரர்களை எப்படித் தேர்வு செய்தாலும் இனி மைதானத்தில் எப்படி விளையாடுகிறோம் என்பது முக்கியம்.
கடந்த வருடம் சரியாக விளையாடாததற்கு ஒன்றா இரண்டா, பல காரணங்கள் உண்டு. சில வீரர்கள் விளையாட வராதது, இரண்டாக நடத்தப்பட்ட போட்டி, நீண்ட இடைவெளி, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக விளையாடாதது எனப் பல காரணங்கள் உண்டு. அவையெல்லாம் கடந்த காலம். அதனால்தான் அணியை மாற்றியுள்ளோம். புதிய போட்டியில் கவனம் செலுத்துகிறோம். இந்த வருடம் கோப்பையை வெல்வது தான் எங்களுடைய லட்சியம் என்றார்.