

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ உச்சநீதிமன்ற உத்தரவின்படி மருத்துவக்குழுவை அமைத்துள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடையாததால் ஆணையத்தின் பதவிக் காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விசாரணைக்குத் தடை கோரி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
அந்த வழக்கின் முந்தைய விசாரணையில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவும் வகையில், மருத்துவக் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மருத்துவக் குழுவில் இடம் பெறும் மருத்துவ வல்லுநா்களை எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் நியமிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர் நிகல் டாண்டன் தலைமையில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான துறை ரீதியிலான வல்லுநர்கள்.
மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அடுத்தகட்டவ விசாரணை குறித்த ஆலோசனை வருகிற 16 ஆம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.