சென்னையில் முறையான வடிகால் பணிகள் செய்யவில்லை என்று அரசின் மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு நாள்களாக தொடர்ந்து புயல் காற்றுடன் நீடித்த கனமழை நேற்று நள்ளிரவு முதல் படிப்படியாக குறையத் தொடங்கியது. மழை குறைந்ததால் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, “அதிமுக ஆட்சியில் பருவமழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆனால் வானிலை மையம் முன்பே அறிவித்திருந்தும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை.
திமுக ஆட்சியில் நேற்றுதான் (டிச.4) மீட்பு பணிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ரூ.4,000 கோடிக்கு வடிகால் பணிகள் நடந்ததாக அமைச்சர்கள் கூறினாலும், மக்களுக்கு ஒன்றும் போய்ச் சேரவில்லை. அரசின் திட்டமிடப்படாத பணிகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “மழை நின்றபின்பும் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை எப்போது மோட்டார் வாங்கி வெளியேற்றுவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.