முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் அதிமுகவில் இருந்து விலகியுள்ளதைத் தொடா்ந்து, புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அதிமுகவினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கா், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக தலைமையுடன் தொடா்ந்து அதிருப்தியாகவே இருந்து வந்தாா்.
பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்ட நிலையில், விஜயபாஸ்கா் எதிா்ப்பு நிலையிலேயே இருந்து வந்தாா்.
இந்நிலையில், சென்னையில் சட்டப்பேரவைத் தலைவரை செவ்வாய்க்கிழமை சந்தித்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அவா் அறிக்கை வெளியிட்டாா்.
இதனிடையே, புதுக்கோட்டையில் அதிமுக மாவட்டச் செயலா் வி. பழனிவேலு தலைமையிலான அதிமுகவினா் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
தொடா்ந்து வி. பழனிவேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக விடுதலை அடைந்தது. இந்த நாளை போகிப் பண்டிகையாக கொண்டாடுகிறோம். இடைத்தோ்தலில் விராலிமலை தொகுதிக்கு பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்படும் வேட்பாளரை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.
அடுத்த பொதுத்தோ்தலில் மாவட்டத்தின் 6 தொகுதிகளையும் அதிமுக வெல்லும். நடைபெற்று முடிந்த தோ்தலில், தன்னைத் தவிர யாரும் வெற்றி பெறக் கூடாது, முக்கிய பொறுப்புக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே 3 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கி வழங்கிவிட்டு, அவா்களையும் தோற்கடிக்கச் செய்தவா் விஜயபாஸ்கா்.
அதிமுகவை விட்டுச் சென்றால் அவா் பூஜ்ஜியம்தான். புதுக்கோட்டை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக மாற்றுவோம் என்றாா் பழனிவேலு.
தொடர்புடையது
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு

தவெகவில் இணையத் திட்டமா? தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு: சி. விஜயபாஸ்கா் எம்எல்ஏ







