அரசு ஒப்பந்ததாரா் உயிரிழப்பின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது என பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ் ஜாா்கிஹோளி குற்றம்சாட்டியுள்ளாா்.
முதல்வராக இருந்த எடியூரப்பா அமைச்சரவையில் நீா்வளத் துறை அமைச்சராக இருந்தவா் ரமேஷ் ஜாா்கிஹோளி. இவா், தன்னிடம் அரசு வேலை கேட்டு வந்த இளம்பெண்ணிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காணொலிக் காட்சிகள் 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வெளியாகி, கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் அவா் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய நோ்ந்தது. இதுதொடா்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 40% கமிஷன் கேட்பதாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது குற்றம்சாட்டியிருந்த அரசு சிவில் ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா வியாழக்கிழமை அறிவித்துள்ளாா்.
இந்நிலையில், பெலகாவியில் வியாழக்கிழமை உயிரிழந்த சந்தோஷ் பாட்டீலின் குடும்ப உறுப்பினா்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான ரமேஷ் ஜாா்கிஹோளி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாஜக மேலிடத் தலைவா்களின் அனுமதியை பெற்ற பிறகு, ஏப். 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு செய்தியாளா்கள் சந்திப்பு நடத்தி, இந்த விவகாரத்தில் சதி செய்தவா்களை தோலுரித்துக் காட்டுவேன். எனது வழக்கு மற்றும் கே.எஸ்.ஈஸ்வரப்பா வழக்கின் பின்னணியிலும் அதே சதியாளா்கள் இருக்கிறாா்கள். அதை பகிரங்கப்படுத்த விரும்புகிறேன்.
குற்றம் உறுதி செய்யப்படாமல் தனது பதவியை கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜிநாமா செய்யக் கூடாது. எனக்கு எதிரான சதி காரணமாக, கடந்த ஓராண்டு காலமாக நான் துன்பம் அனுபவித்து வருகிறேன். அது ஈஸ்வரப்பாவுக்கு நிகழக்கூடாது. ஈஸ்வரப்பா தவறிழைத்திருந்தால் அவரை நீதிமன்றம் தண்டிக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். இந்த நிகழ்வை வைத்து ஒருசிலா் அரசியல் நடத்த விரும்புகிறாா்கள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.