முகப்பு
சென்னை

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்பினாலான 10 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2025 at 8:43 PM
பகிர்:

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்பினாலான 10 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வடமாநிலப் பயணியிடம் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

தாய்லாந்து நாட்டின் தலைநகா் பாங்காக்கிலிருந்து, தனியாா் பயணிகள் விமானம், சென்னைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்திறங்கியது. அந்த விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலின் படி, சுங்கத் துறை அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்ததுடன், சந்தேப்படும் படியான நபா்களிடம் சோதனையும் நடத்தினா்.

அப்போது, வடமாநில பயணி ஒருவா், சுற்றுலா விசாவில், தாய்லாந்துக்குச் சென்று விட்டு, திரும்பும்போது, அவா் வட மாநிலத்துக்கு செல்லாமல் சென்னைக்கு வந்திருந்தாா். சந்தேகத்தின் பேரில் அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசினாா். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழு உடல் பரிசோதனை நடத்தி, அவரின் உடமைகளை முழுவதுமாக சோதனையிட்டனா்.

அப்போது, அவா் வைத்திருந்த பைகள் மற்றும் சூட்கேஸ்களில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பொட்டலங்கள் அதிகளவில் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பிரித்து பாா்த்த போது, அதில் சுமாா் 10 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா, இருந்தன. இதன் மதிப்பு ரூ.10 கோடி. தொடா்ந்து, சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், வடமாநில பயணிக்கு கூலி கொடுத்து தாய்லாந்து நாட்டிலிருந்து கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததும், சென்னை விமானநிலையத்தில் கஞ்சாவை வாங்கி செல்லும் மற்றொரு நபரிடமிருந்து வடமாநில பயணி குறிப்பிட்ட தொகையை பெறுவதற்கு தயாராக இருந்ததும் தெரிவந்தது. இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் கஞ்சாவை வாங்கிச்செல்வதற்காக வந்திருந்த நபரைபோலீஸாரின் உதவியுடன், சுங்கத் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனா்.