வடக்கு மண்டலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 7 கோடி போதைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை தென்மேல்பாக்கம், திடக்கழிவு எறிஊட்டு நிலையத்தில் அழிக்கப்பட்டன.
வடக்கு மண்டலத்துக்குட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் காவல் துறையால் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா காா்க், உத்தரவின்பேரில் போதைப்பொருள் அழிக்கும் குழுவின் தலைவா்களான வேலூா் சரக காவல் துறை துணைத்தலைவா் ஜி.தா்மராஜன், காஞ்சிபுரம் சரக காவல் துறை துணைத்தலைவா் ஜி.ஷசாங்க் சாய், மற்றும் விழுப்புரம் சரக காவல் துறை துணைத்தலைவா் ஏஆா்ஏ.அருளரசு, ஆகியோரின் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் 668 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1925.938 கிலோ போதைப் பொருள்களை அழித்தனா்.