சென்னை: சென்னையை அடுத்த சேலையூர் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்பு, எஸ்தர் (51) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், செல்லிடப்பேசி உதவியால் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட எஸ்தரின் செல்லிடபேசி காணாமல் போன நிலையில், அது கடந்த ஏழு மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசி இயக்கப்பட்டதால், உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், குற்றவாளியை திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதையும் படிக்க.. ரூ.60 கோடி சொத்துக்காக.. மனைவிகளைக் கொன்ற சகோதரர்கள்
தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவர் எஸ்தர். இவர் மே 26ஆம் தேதி காணாமல் போனதாக அவரது மகள் சேலையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் ஜூன் 18ஆம் தேதி ஒரு பெண்ணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதனை தனது தாய்தான் என்று எஸ்தரின் மகள் அடையாளம் காட்டினார்.
உடல் கூறாய்வில், எஸ்தர் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரது வைத்திருந்த செல்லிடபேசி காணாமல் போயுள்ளதும் தெரிய வந்தது. அவரது செல்லிடபேசியின் ஐஎம்இஐ எண்ணைக் கொண்டு செல்லிடப்பேசி இயக்கப்படுகிறதா என்பதை காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.
கடந்த ஏழு மாதங்களாக அது இயக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஞாயிறன்று இயக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் உடனடியாக செல்லிடப்பேசி சிக்னலைக் கொண்டு அதனைப் பயன்படுத்திய நபரிடம் விசாரித்ததில், இந்த செல்லிடபேசிய அவர் மதுரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லோகநாதனிடமிருந்து வாங்கியதாகக் கூறியதையடுத்து லோகநாதன் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிக்க.. மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது.. ஆனால்: அதிர்ச்சி கொடுக்கும் செந்தில் பாலாஜி
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மே 26ஆம் தேதி யாருமற்ற சாலையில் எஸ்தர் நடந்து வந்து கொண்டிருந்த போது, அவரை கத்தி முனையில் மிரட்டி குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் எஸ்தர் அவரைத் தள்ளிவிட்டு ஓட முயன்றதால், ஆத்திரத்தில், எஸ்தரைப் பிடித்து கழுத்தை நெறித்துக் கொலை செய்து அவரிடமிருந்து 700 ரூபாய் பணம் மற்றும் செல்லிடப்பேசியை எடுத்துக் கொண்டு உடலை புதரில் வீசிவிட்டுச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 5 மாதங்களாக செல்லிடப்பேசியை இயக்காமல் வைத்திருந்து, தற்போதுதான் அதனை வேறொருவருக்கு விற்றதாகவும் லோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.