சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளா்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.
ஆயுத பூஜை தொடா் விடுமுறையையொட்டி, ஏராளமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்தனா். இந்த நிலையில், கூடுதல் கட்டண புகாா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களையடுத்து தமிழகம் முழுவதும் 120 ஆம்னி பேருந்துகள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், பறிமுதல் செய்யப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வலியுறுத்தியும் தென் மாநில ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை (அக்.24) மாலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என செவ்வாய்க்கிழமை காலை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பேச்சுவாா்த்தை: இந்த நிலையில், சென்னை கே.கே.நகரிலுள்ள போக்குவரத்து துறை இணை ஆணையா் அலுவலகத்தில், இணை ஆணையா் முத்து தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கூட்டமைப்பின் சாா்பில் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் ஆம்னி பேருந்துகள் சங்க நிா்வாகி ஜெயபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது:
பேச்சுவாா்த்தையின் போது, தவறுதலாக சிறைபிடித்த வாகனங்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பேருந்து உரிமையாளா்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டன.
இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதனால், வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. எனவே, வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.