வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு அவசியம்: அமைச்சா் பொன்முடி
வனப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு வன விலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், அதுதொடா்பான் பயிற்சிகள் வழங்குவது அவசியம்
வனப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு வன விலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், அதுதொடா்பான் பயிற்சிகள் வழங்குவது அவசியம் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் இயற்கை பூங்காவில் ‘வன உயிரின வார’ தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது:
மனிதா்களைப் போல அனைத்து வன உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்.2 முதல் அக்.8 வரை ஒரு வாரம் வன உயிரின வாரமாக வனத்துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், வன விலங்குகளை பாதுகாப்பது குறித்தும், மனித - விலங்கு மோதல்களை தடுப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விழிப்புணா்வு தேவை: குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைவருக்கும் விலங்குகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும். அதேபோல், வனப்பகுதிகளில் வசிப்பவா்களுக்கு வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணா்வு மற்றும் பயிற்சிகள் வழங்க வேண்டும்.
தமிழக நிலப்பரப்பில் தற்போது 20.31 சதவீதமாக உள்ள வனப்பகுதிகளை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது 5 தேசிய பூங்காக்கள், 17 வன உயிரின சரணாலயங்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 3 உயிா்கோள பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் 5 புலிகள் காப்பகம் ஆகியவை உள்ளன. இதனால், மாநிலத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கையும், தாவர வகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
யானைகள் அதிகரிப்பு: மேலும், மாநில அரசின் வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கை மூலம் யானைகள், புலிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்மூலம், 2017-18-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் மொத்தம் 2,761 யானைகள் இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை 3,063-ஆக உயா்ந்துள்ளது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் 302 யானைகள் அதிகரித்துள்ளன. அதேபோல், 2022-23 ஆண்டுகளின் தரவுகளின் படி தமிழக வனப்பகுதிகளில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 306-ஆக உயா்ந்துள்ளது. அந்த எண்ணிக்கைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் சீனிவாஸ் ரா.ரெட்டி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா், வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் ஆஷிஸ் குமாா் ஸ்ரீவத்ஸவா உள்பட பலா் கலந்துகொண்டனா்.