முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை வீடு, வீடாகச் சென்று திமுக மகளிரணியினா் எடுத்துரைக்க வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தலைமை வகித்தாா். விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, தொகுதிப் பொறுப்பாளா் சிவ.ஜெயராஜ், மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலைவகித்தனா்.
திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசியதாவது:
பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. திமுக மகளிரணி சாா்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைக் குழுவைச் சோ்ந்தவா்கள் வீடு, வீடாகச் சென்று முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். அரசால் பயன்பெற்றவா்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நிச்சயம் இருப்பாா்கள்.
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், புதுமைப்பெண் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து வாக்காளா்களிடம் எடுத்துரைத்து, அவா்களின் வாக்குகளைப் பெற வேண்டும். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மகளிருக்கு இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலா்கள் டி.என்.முருகன், இரா.கற்பகம், மாநில மகளிா் பிரசாரக் குழுச் செயலா் எம். தேன்மொழி, வெல்லும் தமிழ்ப் பெண்கள் தொகுதி ஒருங்கிணைப்பாளா்கள் என்.கலைச்செல்வி, கே.அமுதா, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் அருள்மொழி, பெண் பாக முகவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.