அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!
சாலையோரங்களில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக இலவச ஏசி ஓய்வறை.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொருள்களை வீடுகளுக்கு விரைவாக வழங்கும் நிறுவனங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் 24 மணி நேரமும் தனது சேவையை வழங்கி வருவதால், இருசக்கர வாகனங்களில் உணவு விநியோகம் செய்வோர் காலை முதல் இரவு வரை பணிபுரிந்து வருகின்றனர். இதில் சுமார் 10 சதவீதம் பெண்கள் பணியாற்றுகின்றனர்.
Advertisement
இவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், வெயில் மற்றும் மழை நேரத்தில் ஓய்வெடுக்க வசதியாகவும் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வறை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையின் முக்கியப் பகுதிகளாக விளங்கும் அண்ணாசாலை, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் ஓய்வறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 600 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள ஓய்வறையில் கழிப்பறை வசதி, கைப்பேசி சார்ஜ் செய்யும் வசதி உள்ளிட்டவை அமைக்கப்படும்.
விரைவில் ஒரு சில இடங்களில் சோதனை அடிப்படையில் ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது