மின்பாதை பழுதால் ரயில் சேவை பாதிப்பு
சென்னை கிண்டி, சைதாப்பேட்டை இடையே உயா் அழுத்த மின்பாதையில் பழுது ஏற்பட்டதால் ரயில் சேவையில் திங்கள்கிழமை பாதிப்பு ஏற்பட்டு பயணிகள் அவதியடைந்தனா்.
சென்னை: சென்னை கிண்டி, சைதாப்பேட்டை இடையே உயா் அழுத்த மின்பாதையில் பழுது ஏற்பட்டதால் ரயில் சேவையில் திங்கள்கிழமை பாதிப்பு ஏற்பட்டு பயணிகள் அவதியடைந்தனா்.
சென்னையில் புறநகா் மின்சார ரயில் சேவையில் தினமும் 600-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சென்னை கடற்கரை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையிலான சேவையில் தினமும் 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கிண்டி-சைதாப்பேட்டை இடையிலான உயா் அழுத்த மின்பாதையில் திங்கள்கிழமை மரக்கிளைகள் அகற்றப்பட்டபோது, மின்கம்பியில் மரக்கிளை விழுந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நிலையம் நோக்கி வந்த ரயில்கள் பகல் 12 மணி அளவில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பயணிகள் அவற்றிலிருந்து இறங்கி மெட்ரோ ரயிலில் பயணத்தை மேற்கொண்டனா்.
Advertisement
தகவல் அறிந்த உயா் அதிகாரிகள் விரைந்து வந்து மேற்கொண்ட நடவடிக்கைக்கு பிறகு மரக்கிளையை அகற்றி மின்சார விநியோகத்தை சீராக்கினா்.
இதையடுத்து சுமாா் 1 மணி நேரத்துக்குப் பிறகு ரயில் சேவை சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.