முகப்பு
காஞ்சிபுரம்

வேலையிழந்த நோக்கியா நிறுவன ஊழியர்கள் பணி வழங்கக் கோரி மனு

வேலையிழந்த நோக்கியா நிறுவன தொழிலாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு 

Updated On : 10 ஜூலை, 2018 at 4:09 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM

வேலையிழந்த நோக்கியா நிறுவன தொழிலாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு  அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் தங்களது மனுவில் கூறியிருப்பதாவது: 
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா இந்தியா நிறுவனத் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. 
கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பரில் சட்டவிரோதமாக ஆலை மூடப்பட்டது. இதுதொடர்பாக, கடந்த 2015 ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களிலும், 2016 ஜனவரி மாதமும் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியருக்குப் புகார் அளித்திருந்தோம். 
மேலும், தொழிற்சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தோம். 
அதன்படி, நோக்கியா நிறுவனத் தொழிற்சாலையில் இருக்கும் இயந்திரங்களை எடுத்துச் செல்லக் கூடாது என தடையாணை பெற்று, தொடர்ந்து வழக்கை நடத்தி வருகிறோம். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி நோக்கியா நிறுவனம் தொழிற்சாலையில் இருக்கும் இயந்திரங்கள் அனைத்தையும் வெளியேற்றி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரைசிங் ஸ்டார்' எனும் புதிய பெயரில் நோக்கியா நிறுவனம் செல்லிடப்பேசிகளை பெருமளவில் உற்பத்தி செய்து வருகிறது. தவிர, தமிழகம் முழுவதுமிருந்து இந்நிறுவனத்தில் பணிபுரிய ஊழியர்களைப் பணியமர்த்தி, உற்பத்தியை நடத்தி வருகிறது. 
இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெரும்பாலானோருக்கு இழப்பீடு தந்து அனுப்பிவிட்டது. 
இந்நிலையில், சுமார் 104 பேர் இழப்பீடு எதுவும் பெறாமல், தொடர்ந்து நிறுவன ஊழியர்களாக இருந்து வருகிறோம். எனவே, எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய நிறுவனத்தில் வேலை வழங்க ஆட்சியர் உத்தரவிடவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.