காஞ்சிபுரம்: போட்டியில் வெற்றி குறிக்கோளை கொண்டு செயல்படுவதில்லை எனவும், தனது திறமையை வெளிப்படுத்துவது வெற்றி ஆகிறது என செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய சென்னையை சேர்ந்த 16 வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார்.
தமிழகத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்து வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த அவர் மேலும் கூறியது:
புதுதில்லியில் செஸ் ஒலிம்பியாட் சுடரை பிரதமர் மோடி ஏற்றி வைத்துள்ளார். அச்சுடரானது வரும் ஜூலை 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் குறிப்பாக மாமல்லபுரத்தில் நடத்த சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருவது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இதையும் படிக்க: பிரபல டிவி நடிகை மருத்துவமனையில் அனுமதி
இதற்காக தமிழக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2500 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் நானும் பங்கேற்கவுள்ளேன்.
உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்சல் அவர்களை இருமுறை வென்றேன். ஆனால் இருமுறையும் நான் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை.
விளையாடிக்கொண்டிருந்த போது நான் எதிர்பாரத விதமாக வெற்றி கிடைத்தது. எனது வெற்றிக்கு என் பெற்றோர்கள், எனது பயிற்சியாளர் ரமேஷ், பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோரே காரணம் என்றும் பிரக்ஞானந்தா தெரிவித்தார்.
மேலும், நான் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், ஒருபோதும் போட்டியின்போது வெற்றி எனும் நோக்கில் செயல்படாமல், தனது திறமையை வெளிப்படுத்துவதில் வெற்றி கிடைக்கிறது என தெரிவித்தார்.
பயிற்சியாளர் ரமேஷ் கூறுகையில், உலக செஸ் சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை இருமுறை வென்றவர் பிரக்ஞானந்தா என்றார். சுவாமி தரிசனத்தின் போது தாயார் நாகலெட்சுமி, பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் பிரக்ஞானந்தாவுக்கு காமாட்சி அம்மன் திருஉருவப்படத்தையும்,கோயில் பிரசாதத்தையும் வழங்கினார்.