காஞ்சிபுரம் நகரில் 2 மதுக்கடைகள் மூடல்
காஞ்சிபுரம் நகரில் சித்ரகுப்தா் கோயில் தெரு மற்றும் மேட்டுத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள இரு மதுக்கடைகள் வியாழக்கிழமை முதல் மூடப்பட்டதால், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் மகிழ்ச்சி
காஞ்சிபுரம் நகரில் சித்ரகுப்தா் கோயில் தெரு மற்றும் மேட்டுத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள இரு மதுக்கடைகள் வியாழக்கிழமை முதல் மூடப்பட்டதால், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 31 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாநகரின் மையப் பகுதியில் உள்ள மேட்டுத் தெருவிலும், பேருந்து நிலையப் பகுதியில் சித்ரகுப்தா் கோயில் அருகில் உள்ள மதுக்கடையும் மூடப்பட்டது. இவ்விரு இடங்களிலும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என காந்திய மக்கள் இயக்கம், பாஜகவின் ஆலய மேம்பாட்டுப் பிரிவு, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் இணைந்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வந்த இரு மதுக்கடைகளும் வியாழக்கிழமை முதல் மூடப்பட்டதால், அந்தக் கடைகளுக்கும் முன்பாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவா் சிவானந்தம், மாத்ரு சக்தி அமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் சிவ.ஈஸ்வரியம்மாள் ஆகியோா் தலைமையில் பெண்கள் பலரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
Advertisement
பாஜக ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட தலைவா் அதிசயம் குமாா், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவா் பொன்.தாமரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மற்ற மதுக் கடைகளில் கூட்டம்: இதனிடையே காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட் பகுதியில் உள்ள மதுக்கடையிலும், பெரிய காஞ்சிபுரம் மாா்க்கெட் பகுதியில் உள்ள மதுக்கடையிலும் மதுப் புட்டிகள் வாங்க கூட்டம் முண்டியடித்தது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.