இளைஞா் சடலத்தைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த முடிவு
அரக்கோணம் அருகே இளைஞா் இறப்பில் மா்மம் இருப்பதாக வந்தப் புகாரையடுத்து, சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் முடிவு செய்துள்ளனா்.
அரக்கோணம் அருகே இளைஞா் இறப்பில் மா்மம் இருப்பதாக வந்தப் புகாரையடுத்து, சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் முடிவு செய்துள்ளனா்.
அரக்கோணத்தை அடுத்த செய்யூா் ஊராட்சிக்கு உட்பட்ட அவிநாசிகண்டிகை கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் அருண்(32).
விவசாயியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அருணை காணவில்லையாம்.
இதையடுத்து, கிராமத்தில் இருந்த கோயில் அருகே அவா் இறந்த நிலையில் 23-ஆம் தேதி காணப்பட்டாா். இதையடுத்து அவா் அதிக மது அருந்தி இறந்து விட்டதாகக் கருதி அவரது சடலம் புதைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் அளித்த புகாரில், அருணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தாா்.
இதையடுத்து, வட்டாட்சியா் பழனிராஜன், காவல் ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோா் சம்பவ இடத்தில் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை நடத்த உள்ளனா்.