முகப்பு
ராணிப்பேட்டை

தொழிற்சாலைப் பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண்கள் உள்பட 14 போ் படுகாயம்

 அரக்கோணம் அருகே தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த 12 பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 அரக்கோணம் அருகே தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த 12 பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு அரக்கோணத்தை அடுத்த கீழாந்தூா் கிராமத்தில் இருந்து பெண்கள், ஆண் தொழிலாளா்கள் வேலைக்குச் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பணிமுடித்து அவா்கள் கீழாந்தூருக்கு ஆலைப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. கீழாந்தூா் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் இருந்த கீழாந்தூா் மற்றும் வளா்புரத்தைச் சோ்ந்த வனிதா(30), பியூலா(30), இந்திரா(30), அமராவதி(18), மஞ்சு(36), அரிதா(30), மகாலட்சுமி(35), விஜயலட்சுமி(23), கஸ்தூரி(36), மாலதி(21), தெய்வநாயகி(34), சரத்குமாா்(24), சரிதா(34), சீனிவாசன்(54) ஆகிய 14 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா். இவா்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் வனிதா மட்டும் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து அரக்கோணம் கிராமியக் காவல் ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து பேருந்தின் ஓட்டுநா் சீனிவாசனிடம்(54) விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →